வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மதுபானசாலை மீண்டும் திறப்பு : அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்!!

1831

வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரால் தனிப்படுத்தப்பட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மதுபானசாலைகளை திறப்பதற்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியதாக நேற்று மாலை (17.09) வவுனியாவில் சில மதுபானசாலைகள் திறக்கப்பட்டதுடன்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நேரத்திலும் மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோர் கூடியிருந்தனர்.

இதனையடுத்து வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரால் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு சில மதுபானசாலைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் சுகாதாரப் பிரிவினரின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி தனிமைப்படுத்தல் நோட்டீஸை அகற்றி, மருகாரம்பளை மதுபானசாலை இன்று (18.09) திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது.

அத்துடன், குறித்த மதுபானசாலையில் அதிகளவிலவானோர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது வந்து செல்கின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆனுமதியின்றி திறக்கப்பட்டமை தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய கோவிட் பரம்பல் நிலையிலும் மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவில் மக்கள் கூடுகின்றமை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை மீறி,

மதுபானசாலையை திறந்து வியாபாரம் செய்கின்றமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள சுகாதரப் பிரிவினர் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், வர்த்தக நிலையங்களை பார்வையிடல், மக்களின் நடமாட்டமத்தை கட்டுப்படுத்தல், சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளில் இருந்து ஓதுங்கி இருப்பது தொடர்பிலும் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவருகிறது.