வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டை பரிசோதனை : அட்டை இல்லாதோருக்கு அன்டிஜன் சோதனை!!

1919

வவுனியா வடக்கில்..

கோவிட் தடுப்பூசி அட்டை பரிசோதிக்கும் திட்டம் வடக்கில் இதுவரை நடைமுறையில் இல்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டத்தில் யுத்தம் காரணமாக மோசமாக பாதிப்படைந்த வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக தமது வாழ்வாதாரத்திற்காக,

விவசாயம், கால் நடைவளர்ப்பு, மொத்த விற்பனை, மரக்கறி, வைத்திய தேவை என வீதிகளில் சென்றோர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீதிகளில் சென்றோர் வழிமறிக்கப்பட்டு வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி.திலீபன் தலைமையில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கோவிட் தடுப்பூசி அட்டைகள் கொண்டு செல்லாதோர் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எந்தவித முன்னறிவித்தலுமின்றி வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையால் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றும் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி உள்ளதாக பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.