ஒன்லைன் கற்கையில் ஈடுபடத் தவறிய மாணவன் : தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை!!

1910

காலி..

ஒன்லைன் கற்கையில் ஈடுபடவில்லை என்ற காரணத்தினால் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலி மஹாமோதர சிஹம்பலாகாஹவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தும்புத்தடியொன்றினால் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

தரம் 11ல் கல்வி கற்று வந்த மாணவரே தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதற்காக தந்தை மகனை தலையில் தாக்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலைப் பகுதி உணர்வின்றியிருப்பதாக குறித்த சிறுவன் தாய்க்கு கூறியதனைத் தொடர்ந்து, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவரின் 49 வயதான தந்தையை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.