வவுனியாவில்..
5 வயது சிறுவர்களும் ஆயுதம் ஏந்தினார்களா? எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (01.10) இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘5 வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியவர்களா, மரணச்சான்றிதழும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம், தமிழ்க் குழந்தைகள் பயங்கரவாதிகளா, கையில் ஒப்படைந்த குழந்தைகள் எங்கே, சர்வதேச நிறுவர் தினம் எமக்கு துக்க தினம்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது குரத்து தெரிவித்த அவர்கள், ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளிக்கப்பட்ட எமது குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.
குடும்பம் குடும்பமாக ஒப்படைத்த எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பால் குடி குழந்தையை கூட தாயுடன் கொண்டு சென்றார்கள்.
30இற்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்க முடியாது. சர்வதேசம் எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்தனர்.