இலங்கை மக்களிடம் இராணுவத் தளபதி விடுக்கும் கோரிக்கை!!

1136

இராணுவத் தளபதி..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மக்கள் புரிந்து கொண்டால் மற்றுமொரு பாதிப்பை எதிர்கொள்ள நேரிடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பில் நாட்டின் புத்திசாலித்தனமான மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களை நாங்கள் வீட்டில் செலவழித்தபோது பெரும் தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது என்பதை இலங்கையின் புத்திசாலித்தனமான மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் நாடு திறக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மக்கள் நிலைமைகளை புரிந்துக் கொண்டால் நாட்டில் இன்னுமொரு கொவிட் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும். மக்கள் அவதானமின்றி செயற்பட்டால் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து விடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.