வவுனியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று : ஒருவர் மரணம்!!

1241

கொரோனா..

வவுனியாவில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்தவர்களின் பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (07.10) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்று (07.10) செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 63) ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மூலம் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.