வவுனியாவில் பட்டப்பகலில் துணிகரம் : பணம் நகை கொள்ளை!!

2896

வேப்பங்குளம் பகுதியில்..

வவுனியா – மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றைத் திருடிச் சென்று விட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று பகல் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த கட்டட ஒப்பந்தக்காரர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 8 மணியளவில் செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்குச் சென்றுவிட்டார். மாலை 6 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டின் முற்றத்தில் அலுமாரியின் பெட்டகத்தின் சிலபகுதிகள் சிதறிக் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டிற்குள் உட்சென்று பார்த்தபோது பின்கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்ட நான்கு பவுன் பெறுமதியான நகைகள் மற்றும் எழுபதாயிரம் ரூபா பணம் என்பனவும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .