வவுனியாவில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் : 24 வயது யுவதி உட்பட மூவர் மரணம்!!

2357

கொரோனா..

வவுனியாவில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 24 வயது யுவதி உட்பட மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை (16.10) வெளியாகின.

அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேலும் 32 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இரவு வெளியாகிய முடிவுகளின் படி 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், காலை வெளியாகிய முடிவுகளின் படி 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யாப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக எந்தவித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும், உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் என மூவர் மரணமடைந்துள்ளனர்.

மரணித்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.