பொலிஸாரை கொல்ல முயன்றதாக 9 மாத குழந்தை மீது வழக்கு தொடர்ந்த வினோதம்!!

668

Pak

பொலிசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள வினோதமான சம்பவம் லாகூரில் நடந்துள்ளது.

மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ரபாகத் அலி 12ம் திகதி வரை பிணை வழங்கினார்.

பின்னர் அந்தக் குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு பொலிஸாரிடம் குறிப்பிட்டார். குற்றவாளிகளின் சார்பாக ஆஜரான இர்பான் தரார், மறு விசாரணையின்போது அந்த குழந்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

குழந்தையின் மீது தவறில்லை என்று பொலிஸார் அறிவிக்கும் பட்சத்தில் அதற்கான பிணை உறுதி செய்யப்படும் என்றும் தரார் குறிப்பிட்டார்.

குழந்தையின் மீது வழக்கு பதிவு செய்த சம்பவத்தில் காவலர்களிடம் குழப்பம் நடந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரியான ரானா ஜப்பார் தெரிவித்தார்.

இந்தத் தவறுக்காக சப்-இன்ஸ்பெக்டர் காஷிப் அகமது என்பவரைப் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தன் மகன் மீது, தன் மீது, மேலும் 25 பேர்கள் மீதும் பொலிஸார் பொய்யான வழக்கினைப் பதிவு செய்துள்ளதாக மூசாவின் தந்தை கூறினார்.

தாங்கள் வாழும் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப்படாததை எதிர்த்து போராட்டம் நடத்தியதே தாங்கள் செய்த தவறு என்று கூறிய அவர், பொலிஸாரின் முதல் தகவல் அறிக்கையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டினார்.