காணாமல் போன பொலிஸ் சார்ஜனின் சடலம் தண்ணீர் தாங்கிக்குள் இருந்து மீட்பு!!

1209

எஸ்.இளகோவன்..

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காணாமல் போன, கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் வைத்தியசாலையின் தண்ணீர் தாங்கிக்குள் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி 51 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் அது மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

குடிநீருக்கு பயன்படுத்தும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக வைத்தியசாலை விடுதிகளில் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தண்ணீர் தாங்கியை பரிசோதித்த போது இதில் சடலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த எஸ்.இளகோவன் (S.Elangovan) என்ற பொலிஸ் சார்ஜன்டே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை கம்பளை நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர (Sreenith Wijesekara) மேற்கொண்டார். உயிரிழந்தவரின் சடலத்தை அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளார். பிரேத பரிசோதனைக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரியவருகிறது.