சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு பகுதியில் ஜுன்பு நகரம் உள்ளது. இங்கு ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் தனது வீட்டிலேயே அதை நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் பலர் பணி புரிந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு தொழிற்சாலை உரிமையாளரின் 3 வயது மகள் சிகரெட் லைட்டரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அதில் இருந்து வெளியேறிய தீ உடைகள் தயாரிக்கும் துணியில் பிடித்து எரிந்தது. பின்னர் அது மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது.
உடனே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் தப்பித்து வெளியேற முயன்றனர். ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக அக்கட்டிடம் இருந்ததால் அனைவரும் தப்பிக்க முடியவில்லை.
தீயில் சிக்கி 12 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன.
இச்சம்பவம் குறித்து ஆடை தயாரிப்பு தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி வீட்டிலேயே ஆடை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.