அரிசிக்கு தட்டுப்பாடு என்றால் மரவள்ளி கிழங்கை சாப்பிடுங்கள் : இலங்கை மக்களுக்கு சமல் ராஜபக்ச வழங்கிய அறிவுரை!!

1647

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளி கிழங்கு, பாசி பயறு போன்றவற்றை உண்டதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாண் சாப்பிடுவதை விட மரவள்ளி கிழங்கு, பாசி பயறு சாப்பிடுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கும் சிறந்த மருந்து எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நானும் ஒரு விவசாயி, நான் சேதனப் பசளையை பயன்படுத்தி பயிர் செய்தேன். புதியவர்களுக்கு இது புதிய அனுபவம் தொடர்ந்தும் செய்தால், வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

முதல் போகத்தில் அனுபவம் கிடைக்கும். அறுவடை குறைந்தால், இழப்பீடு வழங்கப்படும் என உறுதியும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அஞ்ச தேவையில்லை.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எழுப்பும் குரலை கேட்டால், சேதனப் பசளை சிறந்தது, அதனை உடனடியாக செய்வதே தவறு என்று கூறுவதை கேட்க முடிகிறது.

எவரும் சேதனப் பசளை மூலமாக பயிர் செய்கையை எதிர்க்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. மக்களுக்கு நாம் விஷமற்ற போஷாக்குள்ள உணவை வழங்க வேண்டும்.

பல்தேசிய நிறுவனங்கள் தேவையில்லை என கடந்த காலங்களில் கோஷமிட்டனர். தற்போது இரசாயன பசளையை இறக்குமதி செய்து அந்த நிறுவனங்களை வைத்துக்கொள்ளுமாறு கூறுகின்றனர். இவற்றை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எமது நிலங்களில் மரவள்ளி கிழங்கு சிறப்பாக வளரும். 60க்கும் மேற்பட்ட தேசிய கிழங்கு வகைகள் இருக்கின்றன. பாசி பயறு , கௌப்பி போன்ற பயிர்கள் இருக்கின்றன.

இவற்றை உணவுக்காக எடுப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இரசாயன பசளைக்காக எமது பணம் செலவாகின்றது. இரண்டு தரப்பினரும் இது பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம்.

அரிசிக்கு தற்போதும் தட்டுப்பாடு நிலவுகிறது. எந்தளவு தொகை அரிசி இருந்தாலும் குறைந்த வருமானம் பெறுவோருக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர்.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு எப்படி குறைந்த விலையில் அரிசியை வழங்கலாம் என சிந்திக்கின்றனர் எனவும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-