வவுனியா ஓமந்தை ஈயத் தொழிற்சாலையில் உருக்கு கல் இடிந்து விழுந்தமையால் தொழிலாளி ஒருவர் மரணம்!!

2119

ஓமந்தை..

வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத்தொழிற்சாலையில் ஈயம் உருக்கும் ஆலையில் காணப்பட்ட உருக்கு கல் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் (07.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுதிட்டத்தை அண்மித்து காணப்படும் ஈயத் தொழிற்சாலையில் ஈயத்தை உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆலையின் உள்ளே காணப்பட்ட உருக்கு கற்களை மாற்றீடு செய்வதற்காக மூவர் இணைந்து அவற்றை அகற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த ஆலையில் இருந்த உருக்கு கல் உடைந்து விழுந்தமையால் அங்கு பாதுகாப்பற்ற முறையில் கடமையில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். அவரது தலையில் கல் விழுந்தமையினாலேயே அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு உதயராஜ் (வயது 38) என்பவரே மரணமடைந்தவராவார்.

அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.