மூன்று வயது ஆண் குழந்தையுடன் கணவனும், மனைவியும் செய்த மோசமான காரியம்!!

2318

முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, வண்டியின் சாரதி முகத்தில் மிளகாய் தூளை தூவி தலையில் சுத்தியலால் தாக்கி, முச்சக்கரவண்டியை கொள்ளையிட்ட கணவன், மனைவி, மூன்று வயது ஆண் குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டியில் இருந்து 32 அங்கு தொலைக்காட்சி பெட்டி, மடிக்கணனி, தண்ணீர் பம்பி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரான பெண் ஹோமாகமை பிட்டிபன சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஏறியுள்ளதுடன் பிட்டிபன புத்தக களஞ்சியத்திற்கு அருகில்,

குறுக்கு பாதை ஒன்றுக்குள் சென்று வழியில் சென்ற பெண்ணொருவரின் கையடக்க தொலைபேசியை பெற்று ஒருவரை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பெண்ணின் கணவன் எனக் கூறப்படும் நபர் வந்துள்ளார். அவர் வந்ததுடன் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண், சாரதியின் முகத்தில் மிளகாய் தூளை தூவியுள்ளார்.

அத்துடன் அந்த இடத்திற்கு வந்த நபர், சாரதியின் தலையில் சுத்தியலால் தாக்கி, அவரை அருகில் உள்ள காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டு விட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி மீகொட பிரதேசம் ஊடாக சென்று கொண்டிருந்த போது பொலிஸார் அதனை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர்.

கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அப்போது முச்சக்கர வண்டியை கைவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த கணவன், மனைவி மற்றும் பிள்ளையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து வீதியில் செல்லும் முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டு, அவற்றின் பாகங்களை கழற்றி விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றை ஹோமாகமை பொலிஸார் ஒரு மாதத்திற்கு முன்னரும் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.