பேருந்தும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி!!

1549

விபத்து..

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இ.போ.சபைக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்ற கனரக வாகனம் ஒன்றும் ஹட்டன் பகுதியிலிருந்து நாவலப்பிட்டி பகுதிக்குச் சென்ற இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பேருந்து ஒன்றுமே இவ்வாறு இன்று காலை 7 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, பேருந்தின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் கினிகத்தேனை – கண்டி வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. குறித்த கனரக வாகன சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனதால்,

இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.