கணணி முன் அதிக நேரம் உட்காரும் சிறுவர்களுக்கு ஆபத்து!!

414

Childrens

தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கணணி முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது.

இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில் ஒஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்பினை அளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தங்களுடைய கட்டிளமைப் பருவத்தில் உட்கார்ந்தே பணியாற்றும் இளைஞர்களுக்கு எலும்புத் தாது அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று நோர்வே ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

ஒருவருக்கு பிறந்ததிலிருந்து வளர்ச்சி காணும் எலும்புகள் கட்டிளமைப் பருவத்தின் இறுதியில் உச்சகட்ட வளர்ச்சியைப் பெறுகின்றன. ஆனால், இந்த எலும்புத் தாது அடர்த்தி குறைபாடானது எலும்புகளின் அதிகபட்ச வலிமை மற்றும் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும் என்று அவர் எச்சரிக்கின்றார்.

அதேபோல் ஒருவரது உடல் எடையும் இத்தகைய குறைபாடுகளால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டிரோம்சோவில் உள்ள நோர்வே ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் ஆன்னி விந்தர் கூறினார்.

15லிருந்து 18 வயதுக்குட்பட்ட 463 பெண்கள் மற்றும் 484 ஆண்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கணணி திரை முன் செலவிடும் நேரமும், எலும்புத் தாது அடர்த்தியும் வயதின் அனுசரிப்பு, பாலியல் முதிர்ச்சி, பிஎம்ஐ, ஓய்வுநேரம், உடல் செயல்பாடு, புகை, மது, மீன் எண்ணெய் மற்றும் கார்பனேட் பானம் நுகர்வு போன்ற பல தொடர்புகளுடன் ஆராயப்பட்டது.

இதில் பெண்களைவிட ஆண்களே அதிக நேரம் கணணி முன் செலவிடுகின்றனர் என்றும், இதனால் அவர்களின் உடல் எடையும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச ஒஸ்டியோபொராசிஸ் அமைப்பின் கணக்கீட்டின்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சராசரியாக ஐந்தில் ஒருவர் இந்தக் குறைபாட்டினாலேயே எலும்பு முறிவுக்கு ஆளாகின்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.