
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 41 வருடமாக கடைப்பிடித்து வந்த ஒரு முக்கியமான வழக்கத்தை நாடாளுமன்ற தேர்தலுக்காக முதல் முறையாக கைவிட்டுள்ளார்.
வைகோவின் தந்தையார் வையாபுரி. இவர் கடந்த 1973ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி இயற்கை எய்தினார். அது முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ம் திகதி மெளன விரதம் இருப்பார் வைகோ.
கடந்த 41 வருடங்களாக இதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டுள்ளது. வைகோ, விருதுநகரில் போட்டியிடுகிறார். தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு தந்தையார் நினைவு தினத்தன்று அவர் மெளன விரதத்தைக் கடைப்பிடிக்கவில்லை.
இருப்பினும் நேற்று காலையில் இருந்து மாலை வரை உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்தார். விருதுநகர் தொகுதியில் வைகோவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகரில் அவர் பேசினார். கொளுத்தும் வெயிலில் ஏதுவும் சாப்பிடாமல் அவருடன் பிரச்சாரத்தில் வைகோ மாலை வரை பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




