டெங்கு..
வவுனியா நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் நகர் வாழ் மக்களுக்கு சுகாதார பிரிவினர் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதுடன் மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் டெங்கு தொற்று தற்போது அதிகரித்து வருகின்றமையினால் வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்டவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில்,
டெங்கு பரவும் இடங்கள் காணப்பட்டால் அதனை உடனடியாக அகற்றுவதுடன் வீடு அல்லது வர்த்தக நிலையத்திற்கு முன்பாகவுள்ள வடிகான்களில் நீர் தேங்காத வண்ணம் பராமரித்தல் அவசியமாகும்.
தற்போது மாவட்டத்தில் நகரப்புறங்களில் டெங்கு நோயின் தொற்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. அதன் காரணமாக நகரபுறங்களில் வசிப்பவர்கள் மற்றும் வர்த்தக நிலையத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக டெங்கு காணப்படும் இடங்களை சுத்தம் செய்தல் வேண்டும்.
குறித்த மூன்று தினங்களில் பின்னர் சுகாதார பிரிவினரினால் மேற்பார்வைகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் டெங்கு பெருகும் அபாயம் காணப்படும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எவ்வித மன்னிப்பும் இன்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.