புகையிரதத்தில் மோதி இளைஞர் பரிதாபமாக பலி!!

1480

பதுளையில்..

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தலவாக்கலை, சென்.கிளயார் மற்றும் சென். அன்ட்ரூஸ் ஆகிய இடங்களுக்கு இடையில் இன்று (15.12.2021) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் கொட்டகலை சென்.அன்ட்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஆர். மோகனசுந்தரம் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவாறு ரயில் பாதையில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கொட்டகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து குறித்து தலவாக்கலை மற்றும் திம்புளை பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.