வவுனியாவில் இன்று (08.04) மாலை 4 மணிமுதல் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவிவந்ததுடன், என்றும் இல்லாதவாறு வெப்பநிலை 40 செல்சிஸ் வரை சென்று மக்களை வாட்டிவதைத்தது.
சிறுவர்கள், முதியோர் உட்பட மக்கள் வெப்பநிலையை தாங்கமுடியாது கடும் அவதிக்கு உள்ளாகியிருந்தார்கள். இன் நிலையில் இன்று மாலை 4 மணிமுதல் வவுனியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் எமது பிரதேச நிருபர்கள் தெரிவித்தனர். கடும் வறட்சி நிலவிவந்த நிலையில் இம் மழையினால் விவசாயிகள் உட்பட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-பண்டிதர்-