இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலம் குறித்து விரைவில் விரிவாக ஊடகங்களிடம் பேசப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை அமலா பால்.
இயக்குநர் விஜய்யின் தெய்வத் திருமகள் படம்தான் அமலா பால் முதலில் நடித்தது. ஆனால் படத்தில் நடிக்கும்போதே, அமலா பால் – விஜய் நெருக்கம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்தன.
விஜய்யின் குடும்பத்தில் ஒருவராகவே மாறி, அவர்கள் வீட்டு விசேஷங்களில் அமலா பாலும் கலந்து கொண்டார். இதுகுறித்து கேட்டபோது, சினிமா வழக்கப்படி, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். வேறு ஒன்றுமில்லை என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் விஜய்க்கும் அமலாவுக்கும் திருமணம் என்று சில தினங்களாக கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ செய்தி எனும் அளவுக்கு உறுதியான செய்திகள் வெளியாகின.
விஜய் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் இல்லை. ஆனால் அமலா பால் திடீரென நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து, அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் ஊடக நண்பர்களிடம் நேரில் பேசவிருக்கிறேன்.
என்னைப் பற்றியும், இயக்குநர் விஜய் பற்றியும் எங்கள் இருவரின் எதிர்காலம் குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் தரும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.