ஆசை ஆசையாக திருமணம் செய்துகொண்ட இளைஞன் : மறுநாளே இளம்பெண் செய்த மோசமான செயல்!!

1068

சேலம்..

சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய சுனில் கார்த்திகேயன் என்பவர்கள் தங்களை புரோக்கர் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும் தங்களிடம் 24 வயது இளம்பெண் இருப்பதாகவும், பெண் பார்க்க கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறைக்கு வருமாறு கூறினர்.

இதனையடுத்து மணிகண்டனும் அங்கு சென்றார். அப்போது சபிதா என்ற பெண்ணை காண்பித்து பிடித்திருக்கிறதா? என கேட்டனர். மணிகண்டனும் பெண் பிடித்திருக்கிறது என கூறவே, அவர்கள் உடனே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து 2 பேருக்கும் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். மேலும் அவரிடம் இருந்து திருமணம் செய்து வைத்ததற்கு ரூ.1½ லட்சம் பணமும் பெற்றனர்.

பின்னர் மணமக்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, சுனில், காத்திகேயன் மற்றும் அவர்களுடன் இருந்த 2 பேர் சபீதாவுக்கு ஊர் புதியது என்பதால் நாங்களும் உடன் வருகிறோம் என்று கூறி, சேலத்திற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்த மறுநாளே சபீதாவின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், எங்களுடன் சபீதாவை அனுப்பி வையுங்கள் என்று 5 பேரும் மணிகண்டனிடம் தெரிவித்தனர்.

அவரும் சபீதாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சென்ற பின்பு அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் கொழிஞ்சாம்பாறைக்கு சென்று விசாரித்தார்.

அப்போது, சபீதா மற்றும் அவருடன் இருந்தவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொழிஞ்சாம்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்த கார்த்திகேயன், சுனில், தேவி, சபீதா உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் திருமணத்திற்கு பெண் தேடுபவர்களை குறிவைத்து இணைத்தளத்தில் விளம்பரம் கொடுத்து தங்களை அணுகுபவர்களின் செல்போன் எண்ணுக்கு, அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்போம்.

புகைப்படத்தை பார்த்து பெண் பிடித்திருந்தால் அவர்களின் முழு விவரம், வசதியானவரா? பணம் தேறுமா? என்பதை எல்லாம் அறிந்து கொண்டு போலியாக திருமணம் செய்து வைத்து பணபறிப்பில் ஈடுபடுவோம் என ஒப்புக்கொண்டனர்.

அப்படி தான் சேலத்தை சேர்ந்த மணிகண்டனையும் ஏமாற்றி திருமணம் செய்து வைத்து, பணம் பறித்ததாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் கார்த்திகேயன், சுனில், தேவி, சபீதா உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சித்தூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.