நாடு முழுவதும் மின்வெட்டு : பெற்றோலிய கூட்டுத்தாபனம் எடுத்துள்ள நடவடிக்கை!!

1678

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபையினால் மூடப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களை பராமரிப்பதற்காக நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) மீண்டும் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இனி கடன் அடிப்படையில் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க முடியாது என முன்னர் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டிற்கு எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை முன்னர் தெரிவித்திருந்தது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் மற்றும் டீசல் தட்டுப்பாடு, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமை மற்றும் நீர்மின் நிலையங்களுடனான நீர்மட்டம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் தினசரி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திலும் அண்மைக்காலமாக மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன. மேலும், மின்வெட்டுக்கான நேர அட்டவணையை மின் வாரியம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும்,, நேற்றையதினம் கால அட்டவணையை மீறி சில பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.