கனடாவில் யாழ். தமிழருக்கு ஏற்பட்ட விபரீதம் : பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்!!

1520

சுரேஷ் தர்மகுலசிங்கம்..

கடந்த மாதம் கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான இலங்கை தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த விபத்து கடந்த (டிசம்பர் ) மாதம் 17ம் திகதி Dundas – Dixie சாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த சுரேஷ் தர்மகுலசிங்கம், அருகில் உள்ள உணவகத்தில் தேனீர் வாங்கிக் கொண்டு அந்தச் சந்திப்பைக் கடந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மகுலசிங்கம் 2010ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது, ​​2008-2012 Ford Escape SUV என்ற கார் அவர் மீது மோதியுள்ளது.

கறுப்பு நிறத்தில் இருப்பதாக நம்பப்படும் வாகனத்தின் சாரதி, “பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல்” அந்த இடத்தை விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மகுலசிங்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கடந்த மாதம் 24ம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தர்மகுலசிங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்தின் காரணமாக வாகனத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் கலந்தாலோசித்து பொலிஸில் சரணடையுமாறு விசாரணையளர்கள் கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு காணொளி (surveillance video)அல்லது dashcam காணொளி இருப்பவர்கள் பொலிஸார் அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.