வவுனியாவில் நெல் அறுவடை பாரிய வீழ்ச்சி : ஏக்கருக்கு 5 மூடை அடிக்கும் அவலம்!!

1587

நெல் அறுவடை..

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு ஏக்கருக்கு 5 தொடக்கம்7 மூடைகள் நெல்லே விளையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அதன் அறுவடைக்காலம் நெருங்கியுள்ளதுடன் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை இடம்பெற்று வருகின்றது.

இம்முறை நெல்லிற்கான பசளை இறக்குமதிக்கு அரசு தடை விதித்திருந்தமையால் நெற்செய்கைக்கு தேவையான பசளை இல்லாமல் விளைச்சலில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாகக் கடந்த காலங்களில் ஏக்கருக்கு 30 மூடைகளுக்கு அதிகமாக விளைச்சல் கிடைத்த நிலையில் இம்முறை 5தொடக்கம்7 மூடை நெல்லே விளைந்துள்ளதாகக் கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இம்முறை பசளை இன்மை மற்றும் மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு, ஏனைய செலவுகள் என ஒரு ஏக்கருக்கு 60ஆயிரத்திற்கும் மேல் செலவழித்துள்ளோம். எனினும் 30 ஆயிரம் ரூபாயே வருமானமாகக் கிடைத்துள்ளது.

இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளோம். எனவே பசளை விடயத்தில் முன் ஆயத்தமின்றி அரசாங்கம் மேற்கொண்ட முடிவினால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எமக்கான நஷ்டத்தை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.