யுவதிகளை மிரட்டி இலங்கை இளைஞனின் மிக மோசமான செயல் : ‘கொடூரமான கோழை’ அவுஸ்திரேலிய நீதிபதி சீற்றம்!!

1502

யுவதிகளின் ஆபாசமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு அவர்களை, வலியுறுத்தி பின்னர் அவற்றை, அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிய குற்றச்சாட்டை இலங்கை மாணவர் ஒருவர் ஏற்றுக்கொண்டதாக அவுஸ்திரேலிய செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

ரன்பதி அமரசிங்க என அடையாளம் காணப்பட்ட 24 வயதான அவர், அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாண நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார்.

இதன்போதே அவர், தமக்கு எதிரான 25 குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீக்கின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும், அவர் இளம் பெண்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

அவர்கள், தமது கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், அவர்களுடன் தொடர்பு கொண்டமைக்கான ஆரம்ப சாட்சியங்களை, பெண்களின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் அனுப்பப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அமரசிங்கவின் குற்றச்செயல் 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது, அவுஸ்திரேலிய காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது ஆரம்பத்தில் 16 குற்றங்கள் சுமத்தப்பட்டன, எனினும் பின்னர் மேலதிக குற்றச்சாட்டுக்களும் சேர்க்கப்பட்டன.

அண்மையில் இடம்பெற்ற விசாரணையின்போது, நீதிபதி டக்ளஸ் ட்ராப்னெல் ரன்பதி அமரசிங்கவை ஒரு “கொடூரமான கோழை” என்று விவரித்தார்.

இந்தநிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் அமரசிங்கவுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 24ம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளதாக அந்தச் செய்திச் சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.