நாட்டில் கடும் எரிபொருள் நெருக்கடி அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை!!

845

எரிபொருள் நெருக்கடி..

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, காணொளி தொழில்நுட்பம் மூலம் வாரத்தில் ஒரு நாள் பாடசாலையை நடத்துதல்,

போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நேரங்களில் அலுவலகங்களை திறப்பது, பொது நிறுவனங்களில் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு அதிகாரிகளை வரவழைப்பதை கட்டுப்படுத்துதல்,

பிரதேச செயலாளர்கள் போன்றவர்களை கொழும்பிற்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தி, இணையத்தில் கலந்துரையாடல்களை நடத்துதல், போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்தல்,

தொழிற்சாலைக்குத் தேவையான ஆற்றலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற தொழில்துறையினரை ஊக்குவித்தல் போன்ற யோசனைகளை அவர் முன்வைத்துள்ளார்.

எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், எரிபொருளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் எரிபொருள் பாவனை அதிகரிப்பிற்கு காரணமானதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கினால் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக செலவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான மாற்று யோசனையாக அமைச்சர் இந்த முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

-தமிழ்வின்-