வவுனியா மாவட்டத்தில் காபெற் வீதிகளில் நெல் உலரவிடும் அவலம் இவ்வருடமும் தொடர்கின்றது!!

2907

வீதிகளில் நெல் உலரவிடும் அவலம்..

வவுனியா மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் இவ் வருடமும் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாக வீதிகளில் நெல்லினை காய வைப்பதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற பல கூட்டங்களில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாகவே ஈரமாக நெல்லினை விற்பனை செய்வதாகவும் ஒவ்வொரு கமக்கார அமைப்புக்கும் குறைந்தது,

நெல் உலர வைப்பதற்கான ஒரு தளத்தினையாவது அமைத்துத் தாருங்கள் என விவசாயிகளினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவை நிறைவேறாததன் காரணமாகவே விவசாயிகள் நெல்லினை வீதிகளில் உலர வைக்கின்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வருடங்களிலும் இந்த நிலைமை தொடர்ந்தது. இந்த நிலைமையினால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புளியங்குளம் – நெடுங்கேணி பிரதான வீதியின் பரவலான இடங்களில் இவ்வாறு நெல் உலர விடப்பட்டுள்ளன.