சிறுவனை கடத்தி 30 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற மூவர் கைது!!

790

Kidnappingசிறுவன் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த மூன்று பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாளிகாவத்தை தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் வசித்து வரும் 8 வயதான சிறுவன் பகுதி நேர வகுப்புக்கு சென்றிருந்த நிலையில், வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில், நேற்றுமுன்தினமிரவு சிறுவனின் பெற்றோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், அவர்களின் மகன் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

பிள்ளையை விடுவிக்க வேண்டுமாயின் தமக்கு 30 லட்சம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தொலைபேசியில் பேசிய நபர் குறிப்பிட்டுள்ளார்.

பணத்துடன் வத்தளை, ஹூணுப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு வருமாறும் இது பற்றி பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டாம் எனவும் அந்த நபர் சிறுவன் தந்தையை அச்சுறுத்தியுள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தி சிறுவனின் தந்தை பணத்துடன் ரயில் நிலையத்திற்கு சென்றதுடன் பொலிஸாரும் அங்கு சென்றிருந்தனர்.

கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் ஏறி பணம் இருக்கும் பையை ரயிலில் இருந்து தூக்கி எறியுமாறு சந்தேக நபர்கள் தொலைபேசி வழியாக சிறுவனின் தந்தைக்கு அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கூறியபடி சிறுவனின் தந்தை பணப் பையை ரயில் இருந்து தூக்கி எறிந்த போது பொலிஸாரும் ரெயிலில் இருந்து அந்த இடத்தில் குதித்துள்ளனர்.

ரயில் இருந்து குதித்த பொலிஸார், பணப்பையை பெற வந்திருந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து ஹூணுப்பிட்டிய ரயில் நிலையத்தின் அருகில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் மீட்கப்பட்டார்.

அத்துடன் அங்கிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.