வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் பௌத்தத்திற்கு முன்னுரிமை : தமிழ் கலாசாரத்திற்கு 3ம் நிலை!!

2651

சுதந்திரதின நிகழ்வில்..

வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டதுடன், தமிழ் கலாசார நிகழ்வு மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02) இடம்பெற்றது.

இதன்போது நிகழ்வுக்கு அழைத்துவரப்பட்ட மதகுருமார்களில் பௌத்த பிக்குகளுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அங்கு அழைக்கப்பட்டிருந்த இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதகுருமார்களுக்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தைதைப் போன்று சாதாரண இருக்கைகள் வழங்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் மூவின மக்கள், நான்கு சமயங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் வவுனியா மண்ணில் பௌத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஏனைய மதகுருமார்களுக்கு அவர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நாட்டிய, நடன நிகழ்வு இடம்பெற்ற போது சிங்கள கலாசார நடனம் முதலாவதாகவும், இஸ்லாமிய காலாசார நடனம் இரண்டாவதாகவும் இடம்பெற்றதுடன் தமிழ் கலாசார நிகழ்வு மூன்றாவதாக இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி உள்ளிட்ட அதிகளவானர்கள் தமிழர்களாக இருந்த நிலையில் தமிழ் காலாசாரத்தை மூன்றாம் நிலைக்கு கொண்டு சென்றமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.