மாயமான விமானத்தின் பயணிகள் உயிரிழக்கவில்லை : ரஷ்யா பரபரப்புத் தகவல்!!

614

Malaysia_Flight_Missing

மாயமான மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தப்பட்டு தனித் தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் திகதி திடீரென காணாமல் போனது. அதில் 12 ஊழியர்கள் உட்பட 239 பயணிகள் இருந்தனர். தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விமானம் மாயமானது தெரியவந்தது.

விசாரணையில், விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் திட்டமிட்டு அணைக்கப்பட்டதும், விமானம் திசை மாறி சென்றதும் அறியக் கிடைத்தன.

இதையடுத்து விமானத்தை தேடும் பணியில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இதற்கிடையில், மலேசிய அரசு உண்மையை மறைக்கிறது. விமானம் மாயமானதில் ஏதோ மர்மம் இருக்கிறது. விமானத்தை பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று சீன அரசும், விமானத்தில் சென்ற 156 சீன பயணிகளின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து தென் மேற்கே சுமார் 2,500 கி.மீ. தொலைவில் சில மர்ம பொருட்கள் மிதப்பது தெரியவந்தது. அவை மலேசிய விமானத்தின் நொறுங்கிய பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் கடலில் மிதந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என்பது உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், கடலுக்கு அடியில் இருந்து விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வந்ததாக சீன அரசு தெரிவித்தது. உடனடியாக கறுப்பு பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்கா வழங்கிய நவீன கருவி உதவியோடு தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏறக்குறைய அந்த இடத்தை நெருங்கிவிட்டதாக நேற்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், திடீர் திருப்பமாக விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவு துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறையினர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். மண் குடிசைகளில் எந்த தொலைதொடர்பு வசதியும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்துள்ளனர். இவ்வாறு ரஷ்ய உளவு துறையினர் தெரிவித்துள்ளதாக டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் நிலையில், விமான பயணிகள் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.