ராஜஸ்தானில்..
இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். இரவு நேரம் என்பதால் கார் விபத்துக்குள்ளானது குறித்து யாருக்கும் தெரியவில்லை என தெரிகிறது.
வெகு நேரத்திற்கு பிறகு கார் விபத்து குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ், மாவட்ட நிர்வாகம், மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் விரைந்தனர்.
பின்பு, ஆற்றில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும், ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்த 9 பேரின் சடலங்களையும் எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகளை அழைத்து வருவதற்காக சென்ற போது நடந்த இந்த விபரீத சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.