யுக்ரேன் மீது அழுத்தங்களை அதிகரித்தால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்துள்ளார்.
யுக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்த கிரிமியா, பொது வாக்கெடுப்பு நடத்தி கடந்த மாதம் ரஷ்யாவுடன் இணைந்தது. இதை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கவில்லை. கிரிமியாவை தன்னுடன் இணைத்த ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிரிமியா போன்று ரஷ்ய மொழி பேசுகிற மக்களை அதிகமாகக்கொண்டுள்ள கிழக்கு உக்ரைனிலும் இத்தகைய நிலை உருவாகி உள்ளது. அங்கு கார்கிவ், லுஹான்ஸ்க், டனட்ஸ்க் நகரங்களில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவாளர்கள் ஆக்கிரமித்து, தங்களை தாங்களே தனி குடியரசு என அறிவித்தனர். ரஷ்யாவுடன் இணைவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுக்ரைன் பிரச்சினையின் ஒரு அங்கமாக, எரிவாயு விநியோகம் செய்ய தங்களுக்கு தரவேண்டிய பெருந்தொகையை யுக்ரைன் தராமல் கடன் வைத்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கான எரிவாயு விநியோகத்தை குறைத்தால், அது ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
எரிசக்தியை ரஷியா ஆயுதமாகப் பயன்படுத்தி மிரட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இதற்கிடையே யுக்ரைன் எல்லையில் ரஷ்யா 40 ஆயிரம் வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதுதொடர்பான செயற்கைக்கோள் படங்களை நேட்டோ வெளியிட்டுள்ளது. இது அந்த பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு தலைவர்களும் யுக்ரைன் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தனர். யுக்ரைன் பிரச்சினையில் ரஷ்யா நெருக்கடியை அதிகரித்தால் அதன் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்போம் என ஏஞ்சலா மெர்க்கலிடம் ஒபாமா கூறினார்.