பொலிஸார் சட்டநடவடிக்கை..

வவுனியா மாவட்டத்தில் வெளிச்சமின்றி (லைட்) பயணித்த துவிச்சக்கரவண்டிகளை செலுத்துபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளமை வெளிச்சமின்றி பயணிக்கும் துவிச்சக்கரவண்டிகளே ஆகும்.

எனவே வவுனியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் துவிச்சக்கரவண்டிகளில் செல்வோர் டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தியிருக்கவேண்டும் எனவும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று (25.02.2022) இரவு 7.30 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலாக காலப்பகுதியில் வவுனியா வைரவப்புளியங்குளம் மற்றும் குருமன்காடு ஆகிய பகுதிகளில் விசேட பொலிஸார் கடமையில் ஈடுபட்டு,

வெளிச்சமின்றி (லைட்) பயணித்த துவிச்சக்கரவண்டிகளை செலுத்துபவர்களை வழிமறித்து அவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களை சேகரித்ததுடன் இரு தினங்களில்,

துவிச்சக்கரவண்டிக்கு டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தி வவுனியா பொலிஸ் நிலையத்தில் காண்பிக்க வேண்டும் எனவும் இதனை மீறி செயற்பட்டால் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தபடுவீர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வெளிச்சமின்றி துவிச்சக்கரவண்டியில் பயணித்த 30க்கு மேற்பட்டவர்களின் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





