கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்து : எட்டு பேர் வைத்தியசாலையில்!!

1197

விபத்து..

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று, லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்கானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (26.02.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து கலேவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், திருகோணமலை மொரவெவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மொரவெவ பிரதேசத்தில் கிரவெல் ஏற்றும் லொறிகள் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று,

எரிபொருள் வரும்வரை உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சக லொறி சாரதி ஒருவர் லொறியை பின்புறமாக நிறுத்துவதற்காக சென்றபோது உறங்கிக் கொண்டிருந்த சக நண்பரை அவதானிக்காமல் டிப்பர் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த நபரின் தலைப்பகுதி டயர் ஓரத்தில் பட்டு காயங்ளுக்கு உள்ளான நிலையில் அவசர ஆம்புலன்ஸ் 1990 வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகின்றது.

குறித்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.