வவுனியா கோவில்குளம் ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகம் நடத்திய கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று (14.04) கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் உதய தாரகை அணியும் செவ்வானம் அணியும் மோதிக்கொண்டது. இதன் சிறப்பு அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் அகில இலங்கை சமாதான நீதவான் திரு சௌந்தர்ராஜன் மற்றும் ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழக சிரேஷ்ட உறுப்பினர்களான சுனில், மணி ஆகியோரும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்கள்.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய செவ்வானம் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 12 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்று 79 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க உதயதாரகை அணி 48 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. செவ்வானம் அணி 30 ஓட்டங்களால் கிண்ணத்தை தனதாக்கியது.