
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.
மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு இயந்திரம் மூலம் சிறுவன் மாலை 4 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
சிறுவன் மீட்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கருணாகரன், மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு இயந்திரம் மூலம் சிறுவன் மீட்கப்பட்டான். தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புப்பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவர் தனது மூன்றரை வயது மகன் ஹர்சனை அழைத்துக் கொண்டு இன்று தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, கணேசன் தோட்டத்தில் வேலை செய்ய சென்று விட்டார். மகன் ஹர்சன் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, தோட்டத்தில் மூடப்படாமல் இருந்த 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் ஹர்சன் தவறி விழுந்துவிட்டான்.




