காட்டு யானை..

வவுனியா சமனங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியில் விவசாய காணியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று (26.03.2022) காட்டு யானையொன்று காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியமையினையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் நிலமையினை பார்வையிட்டதுடன் யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதனையும் அவதானித்தனர்.

அதன் பின்னர் இன்று (27.03.2022) காலை 10.00 மணியளவில் வடமாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் கிரிதரன் அவ்விடத்திற்கு வருகை தந்து யானையினை பார்வையிட்டதுடன்,

யானை வெங்காய வெடியை உண்டதால் வெடி வெடித்து யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதனால் உணவு உட்கொள்ள முடியாமல் போனதால் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

யானைக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவியின் பின்னர் யானையினை காட்டுக்குள் அனுப்பி வைப்பதற்குறிய நடவடிக்கையில் வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.





