காட்டு யானை..

வவுனியா சமனங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியில் விவசாய காணியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

விவசாய காணியில் யானையினை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியமையினையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் நிலமையினை பார்வையிட்டதுடன்,

யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதினையும் அவதானித்துடன் நேற்று (27.03.2022) வடமாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் கிரிதரன் அவ்விடத்திற்கு வருகை தந்து யானையினை பார்வையிட்டதுடன்,

யானை வெங்காய வெடியை உண்டதால் வெடி வெடித்து யானையின் வாய் உட்பகுதி பாதிக்கப்பட்டதனால் உணவு உட்கொள்ள முடியாமல் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று காலை குறித்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் அதனை சுகாதார முறையில் அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





