முரண்பாடு..
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (06.04) மதியம் 12.00 மணியளவில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேருந்தினை ஏ9 வீதியின் குறுக்கே நிறுத்தி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 45 நிமிடங்கள் வரை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஈரப்பெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசலை பெற்றுப்கொள்வதற்காக வாகனங்கள் காத்திருந்த போது டீசல் நிறைவடைந்துள்ளதாக எரிபொருள் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
டீசல் இருந்த போதிலும் தற்போது டீசல் நிறைவடைந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கூறுவதாக தெரிவித்து சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் குறுக்கே இரு பேரூந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன
சம்பவ இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் உடனடியாக வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடன் கலந்துரையாடினார்.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த தெரிவித்து 2500 லீட்டர் டீசலை வாகனங்களுக்கு பகிர்ந்தளிக்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் சம்மதித்துடன் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையடுத்து ஏ9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.