வவுனியா மாவட்ட அரச அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம்!!

2220

சமையல் எரிவாயு..

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உணவங்களுக்கு சமையல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவிலும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சமையல் எரிவாயு வரும் போது நீண்ட வரிசையில் காத்திருந்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு போதியளவு கிடைக்காமையால் சில உணவங்கள் மூடப்படும் அபாய நிலையும் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அவர் எரிவாயு விநியோகஸ்தருடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து உணவகங்களுக்கு எரிவாயுவினை சீராக வழங்குவதற்கு எரிவாயு நிறுவனம் இணங்கியுள்ளது. இதனடிப்படையில் இன்று (06.04) ஒரு தொகுதி உணவங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டிருந்தது.