வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

1408
ஆதிவிநாயகர்..
வவுனியா, வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முதல் நாளான கொடியேற்றம் இன்று (06.04) ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவசிறி ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் அந்தணச் சிவாச்சாரியாகள் புடை நிற்க விசேட அபிடேக ஆராதனைகள் இடம்பெற்று பக்தர்களின் அரோகரோ கோசத்திற்கு மத்தியில் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.
இதனைத் தொர்ந்து மேள தாள வாத்தியங்கள், தேவார பராயணம் என்பன ஆலயத்தில் ஒலிக்க விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆதிவிநாயகர் பெருமான்; உள் வீதி, வெளி வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலித்ததுடன், அடியார்களுக்கான பசி தீர்க்கும் அன்னதானமும் இடம்பெற்றது.
இதேவேளை, தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் மகோற்சவப் பெரு விழாவில் எதிர்வரும் 13ம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் சித்திரைப் புத்தாண்டு நன்நாளான  14ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 15ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.