விற்பனை கண்காட்சியும் சந்தையும்..

புதுவருட தினத்தை முன்னிட்டு ‘எமது உற்பத்திகள் – எமது வரப்பிரசாதம்’ என்னும் தொனிப் பொருளில் விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது.

சமுர்த்தி அபிமானி திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (07.04) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.

இதில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களான புடவைகள், மரக்கறி வகைகள், அலங்காரப் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், எண்ணெய் வகைகள், பொம்மைகள் என்பன விற்பனை செய்யப்பட்டன.

சமுர்த்தி திட்டத்தின் கீழ் பயன்பெற்று உற்பத்தியை மேற்கொள்பவர்கள், பெண் முயற்சியாளர்கள், பிரதேச சிறு முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.

நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிறைசூடி,

உதவி பிரதேச செயலாளர் சஜீவன் பிரியதர்சினி, பிரதேச செயலக தலைமை சமுர்த்தி முகாமையாளர் திருமதி சந்திரகுமார், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் டினேஸ், அரச அதிகாரிகள், சமுர்த்திப் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





