வவுனியா நகரில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

2123

ஆர்ப்பாட்டம்..

வவுனியாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பூட்சிற்றிக்கு முன்பாக இன்று (20.04) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழல்கள் ஊடாக சம்பாதித்தவற்றை மக்கள் உடமையாக்கு, வங்கி வலையமைப்பை பாதுகாத்திடுக, அரச நிறுவனங்களின் விற்பனையை உடன் நிறுத்துக, வாழ்க்கைச் செலவை குறைத்திடு,

மக்கள் கருத்துக்கு செவிசாய்த்து இயலாமையுடைய அரசே வீட்டுக்கு போ, வெளிநாட்டு கறுப்பண சந்தையை நிறுத்து என எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா மாவட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் புதிய மாக்சிச லெனினிச கட்சி உறுப்பினர்கள் என 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.