கேரளாவில்..
கேரளாவில் வீட்டு கிரக பிரவேசம் முடிந்த 3வது நாளில் தீவிபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மகள் உயிருக்கு போராடி வருகிறார். கேரளாவின் இடுக்கியை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (54) மற்றும் இஷா (45).
இவர்களின் மகள் ஸ்ரீதன்யா (17) இவர்களின் புது வீட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கிரகபிரவேசம் நடந்தது. இந்நிலையில் வீட்டின் ஒரு அறையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீப்பிடித்த நிலையில் தீயானது மளமளவென மற்ற இடங்களுக்கு பரவியது.
இந்த தீவிபத்தில் சம்பவ இடத்திலேயே ரவீந்திரனும், இஷாவும் உயிரிழந்தனர். ஸ்ரீதன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்த பிறகு தீ அணைக்கப்பட்டது. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஸ்ரீதன்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.