வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் மஸ்தானை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகம் முற்றுகை!!

942

காதர் மஸ்தானின் அலுவலகம் முற்றுகை..

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானை பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவுனியா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04) மதியம் வவுனியா கண்டி வீதியில் அமைந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார மற்றும் பயிற்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

‘ஜனாதிபதி கோட்டபாயவை வீட்டுக்கு செல்லுமாறும் , பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறும் கோரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மஸ்தான் எம்.பியை இராஜாங்க அமைச்சில் இருந்து உடனடியான இராஜினாமா செய், அரசாங்கத்தை ஆதரித்து விட்டு ஊருக்கு வராதே, மக்களின் கருத்துக்கு மதிப்பளி என கோசங்களை எழுப்பியதுடன்,

அவரது அலுவலக வேலிப் பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான சுலோக அட்டைகளையும் காட்சிப்படுத்தியதுடன் அலுவலக வாயில் மற்றும் அவரது பாரிய பதாதை என்பவற்றிலும் கோட்டாவை வீட்டுக்கு செல்லுமாறும் அரசுக்கு ஆதரவளித்து விட்டு ஊருக்கு வராதே எனவும் வர்ணப் பூச்சினால் பொறித்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது அப் பகுதியில் அதிகளவிலான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.