பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது : கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!!

608

பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து பேராயர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்துச் செய்ய வேண்டும் “ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே மற்றும் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறவில்லை. இந்த நியமனம் சட்டபூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் தோற்கடிக்கப்பட்ட மற்றும் மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை அல்ல, மரியாதைக்குரிய நேர்மையான நபரையே மக்கள் விரும்புகிறார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒரு நபரை மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை : “மகாநாயக்க தேரர் கட்சி சார்பற்ற நபரை பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரை என்ன ஆனது என்பது அனைவரின் யூகமாக உள்ளது.

தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடக்க முடியாது,” எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கச்சார்பற்ற நபரால் மட்டுமே இது நிகழ முடியும் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.