வவுனியா இலுப்பையடியிலும் குடியமர்ந்த புத்தர்!!

1430

புத்தர்..

வவுனியா நகரில் உள்ள இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகவுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் வர்த்தக நிலையங்களும் அதிகமாகவுள்ளன.

இப் பகுதியில் மரம் ஒன்றின் கீழ் பிள்ளையார் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு பல வருடங்களாக அப் பகுதி வர்த்தகர்களும், வீதியால் செல்வோரும் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலுப்பபையடிப் பகுதியில் அமைந்துள்ள வன்னி பௌத்த இளைஞர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் செல்வோர் தரிசிக்கும் வகையில் புதிதாக பீடம் நிறுவப்பட்டு புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு, மின் ஒளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த புத்தர் சிலை உள்ள பகுதியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் தொல்பெருள் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் வீதியில் செல்வோர் காணக்கூடியதாக ஏற்கனவே புத்தர் சிலை உள்ள நிலையில் தற்போது புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா, மன்னார் வீதியில் தமிழ் மக்களது குடிமனை உள்ள பகுதியில் இயங்கி வரும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டு பிரித்தோதுதல் இடம்பெற்றிருந்தது.

மேலும், இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பாக உள்ள பிள்ளையார் ஆலயத்தில் காணப்பட்ட பிள்ளையார் சிலை ஜனவரி 23 ஆம் திகதி காணமல் போயிருந்த நிலையில் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டு மக்களாலும், வர்த்தகர்களாலும் வழிபடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.