வவுனியா இராமனூர் பகுதியில் படையெடுத்த யானைக் கூட்டங்கள்!!

1221

யானைக் கூட்டங்கள்..

வவுனியா- இராமனூர் பகுதியில் யானைக் கூட்டங்கள் படையெடுத்து வந்தமையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் உள்ள மக்கள் குடிமனைகளை அண்டியதாக வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் அருகில் உள்ள சிறிய காடுகளின் ஊடாக 15 இற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வருகை தந்து வயல் வெளிகளில் இன்று (29.05) மாலை நடமாடித் திரிந்தன.

இதனால், அருகில் உள்ள குடிமனைகளுக்குள்ளும், அருகில் மேற்கொண்ட சிறுபோக நெற் செய்கை வயல்களுக்குள்ளும் யானைகள் வந்து விடுமா என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் இருந்துள்ளனர்.

எனினும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக வயல் பகுதியில் நடமாடிய யானைக் கூட்டம் பின்னர் காட்டை நோக்கி திரும்பிச் சென்றுள்ளது. இவ்வாறு யானைக் கூட்டம் அவ்வப்போது வந்து செல்வதால் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவிக்கும் அப் பகுதி மக்கள் தமது பகுதிக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறும் கோரியுள்ளனர்.