வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!!

8840

ராசேந்திரன் யதுர்சி..

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30.05.2022) இரவு 9.30 மணியளவில் 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதினையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,

இன்று (01.06.2022) மதியம் சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதினரல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன்,

சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை என பரிசோதனை முடிவுகளை மாலை 4.30 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவித்தார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் அன்றையதினம் நடந்தது என்ன?

குறித்த சிறுமி தாய் தந்தையினையினை பிரிந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்ததுடன் நேற்றுமுன்தினம் மதியம் தனியார் கல்வி நிலையம் சென்று மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிசார் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிசார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவைடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாடடம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 9.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

உறவினர்களால் நெளுக்குளம் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது கிணற்றிலிருந்து 70மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டது.

அதன் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தினை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உறவினர் அயலவர்கள் என பலரிடம் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் வாக்குமூலத்தினையும் பெற்றிருந்தனர்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.